லக்னோ: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றுள்ளதால், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி பின் தள்ளப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணியின் டி காக் 109 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் லபுஷேன் 46 ரன்களை விளாசினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஷம்ஷி, மஹராஜ் மற்றும் யான்சன் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 102 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. இன்றைய ஆட்டத்திலும் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 4 புள்ளிகளை பெற்றுள்ளதோடு நெட் ரன் ரெட்டும் +2.360ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் போட்டிக்கு முன் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் இருந்தது. அந்த அணியின் நெட் ரன் ரேட் +1.958ஆக இருந்தது. அதேபோல் இந்திய அணியும் 4 புள்ளிகளுடன் +1.500 உடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் அபார வெற்றியால் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திற்கும் பின் தள்ளப்பட்டுள்ளது.