ஹேமில்டன்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளைக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள போதிலும், தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே போட்டியும் கவனம் ஈர்க்காமல் இல்லை. நியூசிலாந்தின் ஹேமில்டனில், இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் 30 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே அதில் 6 போட்டிகளை வென்றுள்ளது. அதில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற தலா ஒரு வெற்றிகள் கவனம் ஈர்க்கின்றன.
வேல்ட் கப் பயிற்சி ஆட்டத்தின்போது இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜிம்பாப்வே. தென் ஆப்பிரிக்கா என்னதான் பலமான அணியாக இருந்தாலும், ஜிம்பாப்வேயை குறைத்து மதிப்பிட்டு களத்தில் இறங்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபிடி வில்லியர்சும், இதையேத்தான் சொல்லியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா ஐசிசி தரவரிசையில் 3வது இடத்திலும், ஜிம்பாப்வே 10வது இடத்திலும் உள்ளது. கடந்த இரு வருடங்களில் 50 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்கா அதில் 29 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளது.
இது ஆப்பிரிக்க நாட்டு அணிகளும் மோத உள்ள இந்த போட்டியும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.