கொல்கத்தா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று நடக்கவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வென்றிருப்பதோடு, கொல்கத்தா மைதானத்தில் முதல் பேட்டிங் ஆடுவதே சாதகமாக பார்க்கப்படுகிறது. கொல்கத்தா மைதானத்தில் இரண்டாம் பாதி ஆட்டம் ஸ்லோவாக மாறும் என்பதால், இரண்டாவது பேட்டிங் ஆடுவது பெரியளவில் உதவி இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இங்கிடி நீக்கப்பட்டு ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டாய்னிஸ் மற்றும் அபாட் நீக்கப்பட்டு மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்ட் சேர்க்கப்பட்டுள்ளனர். டாஸ் வென்ற பின் பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா, நாங்கள் முதல் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். நான் முழு உடல்தகுதியை பெறவில்லை என்றாலும் களமிறங்குகிறேன்.
உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு தலைமை தாங்குவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நாங்கள் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரையிறுதி போட்டியில் விளையாடி இருக்கிறோம். இன்று காலை தென்னாப்பிரிக்கா ரக்பி அணியிடம் இருந்து வாழ்த்து வந்து சேர்ந்தது. அது மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்தது. எங்களின் பாணியில் விளையாடுவோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்யவே விரும்பினோம். கொஞ்சம் வானிலை மேகமூட்டமாக உள்ளது. அதனால் கொஞ்சம் கூடுதல் ஸ்விங் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரே பாணியிலான ஆட்டத்தை தான் விளையாடி வருகின்றனர். இதேபோன்ற அரையிறுதி போட்டிகளில் முன்னதாகவே விளையாடி இருக்கிறோம். கடந்த 2 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.