லண்டன்: தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா இத்தனை ஆண்டுகளாக சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்குவதற்கு அந்த அணியின் வேகப்பந்துவீச்சுதான் காரணம்.
குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளர் இருந்திருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமான உண்மையாகவும் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் வேகப்பந்துவீச்சில் சிறந்த அணிதான். அதைப்போலவே தென்னாப்பிரிக்கா அணியும் வேகப்பந்துவீச்சில் சிறந்த அணியாக விளங்குகிறது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் காகிசோ ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தியதை அடுத்து டெஸ்ட் போட்டிகளில் 332 விக்கெட்களை வீழ்த்தி ஆலன் டொனால்ட் சாதனையை முறியடித்து இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் டேல் ஸ்டெய்ன், ஷான் பொல்லாக், மக்காயா நிடினி, ஆலன் டொனால்ட், காகிசோ ரபாடா என ஐந்து ஜாம்பவான்கள் உள்ளனர். இதுவே அந்த அணியின் ஆதிக்கத்துக்கு காரணமாகவும் உள்ளது.
1991 ஆம் ஆண்டு ஆலன் டொனால்ட் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளராக அறிமுகமானார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஷான் பொல்லாக் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளராக உலக அளவில் புகழ்பெற்றார். அவரைத் தொடர்ந்து, 1998 ஆம் ஆண்டு மக்காயா என்டினி தென்னாப்பிரிக்கா அணியில் இடம் பிடித்து சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
அதன்பிறகு, 2004 ஆம் ஆண்டு டேல் ஸ்டெய்ன் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானார். சரியாக ஆலன் டொனால்ட் ஓய்வு பெற்ற மறு ஆண்டு டேல் ஸ்டெய்ன் அறிமுகமானார். அவர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக விளங்கினார். அவரது பந்துவீச்சைப் பார்த்தாலே பேட்ஸ்மேன்கள் நடுங்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. பின்னர் அவர் காயங்களில் சிக்கி தனது ஆட்டத்தை இழந்தார்.
அந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு தடுமாறத் தொடங்கியிருந்த நிலையில் தான் காகிசோ ரபாடா உச்சம் பெற்றார். அவர் 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவ்வாறாக ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி சிறந்த பந்துவீச்சாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதனால் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அந்த அணி அதிக அளவில் மோசமான தோல்விகளை சந்திக்கவில்லை.
சமீப ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக வெற்றிகளை பெற்றிருந்தாலும், மோசமான தோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சு வெளிநாடுகளில் எடுபடாமல் போவதுதான். பும்ராவைத் தவிர வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
இந்த இடத்தில் தான் தென்னாப்பிரிக்க அணி தனது பந்துவீச்சாளர்களை வைத்து சாதித்து வருகிறது. தற்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் அந்த அணி முன்னேறி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
காகிசோ ரபாடா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க்கோ ஜான்சன் மூன்று விக்கெட்டுகளையும், கேசவ் மஹராஜ் ஒரு விக்கெட்டையும், எய்டன் மார்க்ரம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கில் சொதப்பி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.