லண்டன்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிக் கட்டத்தில் அந்த தொடரை விட்டு வெளியேறிய தென் ஆப்பிரிக்க வீரர்களின் செயல்தான் தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல முக்கிய காரணம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடர் முதலில் மே 27 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பத்து நாட்களுக்கு ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் ஐபிஎல் தொடங்கியபோது அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஜூன் 3 அன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜூன் 10 அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத இருந்தன. அவர்கள் குறைந்தது இரண்டு வாரங்களாவது பயிற்சி செய்ய வேண்டிய நிலை இருந்தது.
அந்த இறுதிப் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்த எட்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு மற்றும் அதன் வீரர்கள் இணைந்து ஒரு முக்கியமான முடிவை எடுத்தனர்.
அதன்படி, மே 27 அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அணியில் இடம் பெற்று இருந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் எட்டு பேர் ஐபிஎல் அணிகளிலிருந்து வெளியேறி லண்டனில் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
காகிசோ ரபாடா - குஜராத் டைட்டன்ஸ்
எய்டன் மார்க்ரம் - லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்
மார்கோ ஜான்சன் - பஞ்சாப் கிங்ஸ்
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்
லுங்கி நிகிடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வியான் முல்டர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ரியான் ரிக்கல்டன் - மும்பை இந்தியன்ஸ்
கார்பின் பியூஷ் - மும்பை இந்தியன்ஸ்
இந்த எட்டு பேரில் ஏழு பேர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கள் நாட்டுக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்ததன் விளைவாகவே, தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போது கோப்பை கிடைத்துள்ளது. அதுவும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி கோப்பை ஒன்றை வென்று வரலாறு படைத்தது.
அதே சமயம், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், இறுதிப் போட்டி வரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தான் முக்கியம் என அவர் நினைத்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு பின்னர் போகலாம், முதலில் ஐபிஎல்-இல் விருப்பம் இருப்பவர்கள் ஆடுங்கள் என விட்டுவிட்டது. அதன் விளைவாகவே, ஜோஷ் ஹேசில்வுட் இறுதிப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
சர்வதேச போட்டிகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு அணிக்கு எந்த அளவுக்கு வெற்றியைத் தரும் என்பதற்கு தென் ஆப்பிரிக்காவின் இந்தச் செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.