சிட்னி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹென்ரி ஹண்ட் என்பவரின் மூக்கில் பந்து அடித்து ரத்தம் கொட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் விஜய் ஹசாரே தொடரை போல் ஆஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பை தொடர் நடத்தப்படும். அந்த வகையில் மார்ஷ் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் விக்டோரியா அணியை எதிர்த்து தெற்கு ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விக்ரோவியா அணி, 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்திருந்தது.

அப்போது தெற்கு ஆஸ்திரேலியா அணியின் போப் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். அப்போது களத்தில் ரோஜர்ஸ் 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். அந்த ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடிக்க மிட் ஆஃப் திசை நோக்கி ரோஜர்ஸ் அடிக்க, அதை கேட்ச் பிடிக்க ஹென்ரி ஹண்ட் என்ற வீரர் தாவினார். ஆனால் டைவ் அடிக்க முயற்சித்த போது கால் தவறியது. அப்போது பந்தை நழுவிட, அந்த பந்து நேராக ஹன்டின் மூக்கில் பளாரென்று அடித்து சென்றது.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த ஹென்றி ஹண்ட், எழுந்திருக்கவே சில நிமிடங்களானது. அதற்குள் மூக்கில் இருந்து பொள பொளவென ரத்தம் கொட்ட தொடங்கியது. இதனால் பேட்ஸ்மேன்கள் உட்பட அனைத்து வீரர்கள் பதற்றமடைந்தனர். ஹென்ரி ஹண்ட்டால் எழுந்து நடக்க முடியாத நிலையில், உடனடியாக பிசியோதெரபிஸ்டை வரவழைத்து மற்ற வீரர்களின் உதவியுடன் ஹண்ட் மைதானத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். அவரது முகம் முழுக்க ரத்தம் இருந்ததால், பயிற்சியாளர்களும் உடனடியாக வெளியில் வந்தனர்.
அதன்பின் அவர் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு, ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் கில்லஸ்பி பேசுகையில், ஹென்ரி ஹண்டிற்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து தெரிய இன்னும் சில மணி நேரங்களாகும். நிச்சயம் ஆரோக்கியம் தான் முதலில் முக்கியம். அவர் இப்போது நன்றாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஹென்ரி ஹண்ட் காயமடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.