டெல்லி: டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 165 ரன்களை விளாசியுள்ளார்.
டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து வடக்கு டெல்லி ஸ்ட்ரைகர்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தெற்கு டெல்லி கேப்டன் ஆயுஷ் பதோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் தொடக்க வீரராக வந்த சர்தக் ரே 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பிரியன்ஷ் ஆர்யா - பதோனி கூட்டணி இணைந்து அதிரடியில் மிரட்டலாக விளையாடியது.

இவர்களின் இருவரும் அதிரடி ஆட்டத்தில் தெற்கு டெல்லி அணி 6 ஓவர்கள் முடிவில் 71 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரியன்ஷ் ஆர்யா 23 பந்துகளில் அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் கேப்டன் பதோனி 24 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். பின்னர் வந்த மனன் பரத்வாஜ் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி பிரியன்ஷ் ஆர்யா ஆச்சரியம் கொடுத்தார்.
இதனால் அந்த அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 157ஆக உயர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை பதோனி முழுமையாக எடுத்து கொண்டார். சித்தார்த்தா சொலங்கி வீசிய ஓவரில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 29 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலமாக 39 பந்துகளில் ஆயுஷ் பதோனி சதம் விளாசி சாதனை படைத்தார். அதேபோல் பிரியன்ஷ் ஆர்யாவும் 40 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன்பின் அதிரடி அடுத்த கியருக்கு சென்றது.
இதனால் வடக்கு டெல்லி அணியில் யாருக்கு பவுலிங் கொடுக்கலாம் என்று புரியாமல் திணறி போயினர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் வைபவ் பவுலிங்கில் பதோனி மீண்டும் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். 52 பந்துகளில் 150 ரன்களை கடந்த பதோனி, இறுதியாக 55 பந்துகளில் 19 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் பிரியன்ஷ் ஆர்யாவும் 50 பந்துகளில் 10 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தெற்கு டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களை குவித்தது. வடக்கு டெல்லி அணியின் மனன் பரத்வாஜ் 2 ஓவர்கள் மட்டுமே வீச் 60 ரன்களை விட்டுக் கொடுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தமாக 31 சிக்ஸ், 19 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்த போது, டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களை எட்டுவது சாதாரண விஷயமல்ல என்று சொல்லப்பட்டது. ஆனால் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் சாதாரணமாக 300 ரன்கள் குவிக்கப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இது அடுத்த ஐபிஎல் தொடரில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன.