பெங்களூரு: துலீப் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கு மண்டல அணியை எதிர்த்து தென் மண்டல அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற மேற்கு மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்பின்னர் களமிறங்கிய தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் விஹாரி மற்றும் திலக் வர்மாவின் அபார ஆட்டத்தால் 213 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கு மண்டல அணி வித்வத் காவேரப்பாவின் அபார பந்துவீச்சால் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய காவேரப்பா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் தென் மண்டல அணி 67 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென் மண்டல அணி தரப்பில் விஹாரி 42 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் விளாசினர். இதனால் அந்த அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் மேற்கு மண்டல அணி வெற்றிபெற 298 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின்னர் களமிறங்கிய மேற்கு மண்டல அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஹர்விக் தேசாய் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த புஜாரா 15 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் பிரியங்க் பஞ்சால் - சர்ஃபராஸ் கான் கூட்டணி வெற்றிக்காக போராடியது. சிறப்பாக ஆடிய பிரியங்க் பஞ்சால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவேரப்பா பந்தில் 95 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் சர்ஃபராஸ் கான் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக மேற்கு மண்டல அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன் மூலம் தென் மண்டல அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று துலீப் டிராபி கோப்பையை கைப்பற்றியது. நட்சத்திர வீரர்கள் இல்லாமல் வலிமையான அணியை வீழ்த்தியுள்ள தென் மண்டல அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்திய காவேரப்பா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.