ஜெய்ப்பூர்: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களான எம்எஸ் தோனி, விராட் கோலி உள்ளிட்டோருடன் பேசுவது தனது நம்பிக்கை அதிகரிப்பதாக ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. அந்த அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அதிரடியாக ஆடியதால் சென்னை அணிக்கு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றதற்கு பவர் பிளே ஓவர்களில் விரைந்து ரன்கள் சேர்த்ததே காரணமாக அமைந்தது. அதிரடி வீரர் பட்லரை விடவும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் சிறப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. நடப்பு சீசனில் ஜெய்ஸ்வால் பெறும் இரண்டாவது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.
இதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசுகையில், ஒவ்வொரு போட்டியையும் ரசித்தே ஆடுகிறேன். ஒவ்வொரு பந்தையும் அடிக்க முயற்சித்தேன் என்பது உண்மைதான். ஆனால் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை கவனித்து கொண்டே இருந்தேன். காற்றடிக்கும் திசையில் தான் என் பவுண்டரியை விளாசினேன். அதேபோல் கிரிக்கெட்டின் இலக்கணத்தில் உள்ள ஷாட்களையும் விளையாடினேன். இந்த சீசன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சீசனுக்கும் அதிகமான உழைப்பை கொடுத்து வருகிறேன்.
ராஜஸ்தான் அணி நிர்வாகத்துடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல் தோனி சார், விராட் கோலி உள்ளிட்டோரிடம் தொடர்ந்து பேசுவது எனக்கு நம்பிக்கையை அதிகரிக்கிறது. எனக்கு எப்போதும் பிரஷரான சூழலில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் என் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் வைத்துள்ளேன். இந்த மைதானத்தில் 200 ரன்கள் அடித்தால், சேஸ் செய்வது எளிதல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
சில சீனியர் வீரர்கள் ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் ஓவர் ரேடட் என்று பேசி வரும் சூழலில், இளம் வயதிலேயே ஸ்ட்ரைக் ரேட்டில் என் கவனம் உள்ளது என்று ஜெய்ஸ்வால் பேசியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் ஜெய்ஸ்வால் விரைவில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இஷான் கிஷன் இடத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.