லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கப் போகிறார் என்பதே இன்றைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
2023ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் மிகமுக்கியமான போட்டி என்பதோடு, ஸ்டீவ் ஸ்மித்தின் 100வது டெஸ்ட் போட்டி என்பதே இந்த ஆட்டத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. சுழற்பந்துவீச்சாளராக அறிமுகம் கண்ட ஒரு வீரர், டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருவது ஆச்சரியமானது தான்.

99 டெஸ்ட் போட்டிகளில் 9,113 ரன்கள் விளாசியதோடு, கிட்டத்தட்ட 60 சராசரியில் பேட்டிங் ஆடுவது கூடுதல் ஆச்சரியம். 32 சதங்கள், 37 அரைசதங்கள் என்று ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ள சாதனைகளை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எந்த அணி, எந்த மைதானமாக இருந்தாலும், ஸ்டீவ் ஸ்மித்திற்கு மட்டும் பேட்டிங் மிக எளிதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கீழிலிருந்து மீண்டும் உச்சத்திற்கு வந்தது தான் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த மகத்தான கம்பேக்.
கிரிக்கெட் உலகம் அதுபோன்று மீண்டும் ஒரு கம்பேக்கை காண்பது அரிதினும் அரிதானது. அதனால் தான் ஸ்டீவ் ஸ்மித்தின் 100வது டெஸ்ட் போட்டி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் ஸ்பெஷல் ஜெர்சியையும் வெளியிட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த ஜெர்சியுடனே களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஜெர்சியில் "100th Test Match 415" என்று வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில் 415 என்பது ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட தொப்பியின் எண்ணாகும். ஆஸ்திரேலியா அணியில் வழங்கப்படும் பச்சை நிற தொப்பிக்கு அந்நாட்டு வீரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயருக்கு பதிலாக 415 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிசிசிஐ நிர்வாகம் இதுபோன்ற செயல்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் புஜாரா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது, சாதாரணமாக ஒரேயொரு விருதை மட்டும் பிசிசிஐ வழங்கியது குறிப்பிடத்தக்கது.