மும்பை: விராட் கோஹ்லி இந்திய அணியின் மற்ற வீரர்களை விட சிறப்பானவர் என்று பிரபல கிரிக்கெட் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆஜ்தக் டிவி ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் கலந்துரையாடலில் சவுரவ் கங்குலி, கபில் தேவ், வாசிம் அக்ரம், இன்சமாம் உல்ஹக் போன்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். கங்குலி கூறுகையில், இந்திய அணியில், ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். இருப்பினும், விராட் கோஹ்லி அவர்களைவிட ஒரு படி மேல் சிறந்த வீரர்.

கடந்த ஆறு வருடங்களாக விராட் சிறப்பாக ஆடிவருகிறார். உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பேட் செய்துள்ளார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவை அவர் மீட்டெடுத்தது சிறப்பான ஆட்டத்திற்கு ஒரு உதாரணம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சுகளிலும் விராட் சதம் அடித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் அணியை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக செய்கிறார். அதனால்தான் அவர் ஸ்பெஷல் வீரர், என்றார்.
விராட் அடுத்த வீரர்களை வம்புக்கு இழுப்பதை விரும்புவார். அவரது சிறந்த ஆட்டத்திற்கு அதுவும் ஒரு காரணம். ஒட்டுமொத்த எதிரணி ரசிகர்களும் நமக்கு எதிராக செயல்பட்டால் நாம் சிறப்பாக ஆடுகிறோம் என்று அர்த்தம். இதை 1999 உலக கோப்பையில், இன்சமாமிடம் நான் கூறியிருந்தேன். இன்று வங்கதேசத்தில் கோஹ்லியும் அதையே கூறியுள்ளார் என்றார் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தானுக்கும், விராட் மாதிரியான, உத்வேக வீரர் தேவை. பாகிஸ்தான் தற்போது உத்வேகம் இன்றி தத்தளிக்கிறது என்று இன்சமாம் தெரிவித்தார்.