மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் பணி அபாரமானது என்று கேப்டன் டோணி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நேற்று இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து கேப்டன் டோணி கூறியதாவது: இந்திய வெற்றிக்கு ஸ்பின்னர்கள் பங்கு அபாரம். ஹர்திக் பண்டியாவும் சிறப்பாக பந்து வீசி கிறிஸ் லைன் விக்கெட்டை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா இறுதி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். அதிகப்படியான யார்க்கர்களை அவர் வீசி அதற்கு பலனையும் பெற்றார்.
வாட்சன் அடித்த ஷாட்டை ஜடேஜா அபாரமாக பிடித்த விதம் அருமை. கேட்சுகள்தான் மேட்சுகளை வெற்றி பெறச்செய்வதாக டிவி வர்ணணையாளர்கள் கூறுவது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் கேட்ச் அதுவாகும் என்று டோணி தெரிவித்தார்.
மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்ற கோஹ்லி கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நல்ல வேகத்திலும், உயரத்திலும் பந்து எழும்பி வருகிறது. சவால்களை ஏற்பது எனக்கு பிடிக்கும். இங்கு அதிகப்படியான இந்திய ரசிகர்களும் உள்ளனர். எனவே இந்தியாவில் ஆடுவதைப்போலவே உணர்கிறேன்.
ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் அடிக்க ஆரம்பித்தால் அதை பார்ப்பதை விட வேறு சிறந்த காட்சி இருக்க முடியாது. ரோகித்தும், ஷிகரும், ஆஸ்திரேலிய பவுலிங்கை மதிக்காமல் அடித்து ஆடினர். எந்த ஒரு எதிரணிக்குமே மனதளவில் அது தளர்ச்சியை தரக்கூடியதுதான் என்றார்.
ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறுகையில், இந்திய அணி பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது. ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நடு வழியில் பாதையை இழந்துவிட்டோம். இதுதான் டி20 கிரிக்கெட் என்றார்.