மும்பை: இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பயிற்சியாளர் என்ற முறையை டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் முன்வைத்தபோது, கௌதம் கம்பீர் அதை "உங்கள் எல்லையில் இருங்கள்" என்று கூறி நிராகரித்திருந்தார். இந்த விவாதங்களுக்கு மத்தியில், கம்பீரின் முன்னாள் சக வீரரான ஹர்பஜன் சிங், இந்த முறையை எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்களை நியமிக்கும் 'split-coaching' கருத்து, இங்கிலாந்து 2019 உலகக் கோப்பையை இயன் மோர்கன் தலைமையில் வென்ற பிறகு பிரபலமானது. கம்பீரின் விஷயத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சந்தித்துள்ள சரிவுகளே இந்த யோசனைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

அவரது வெள்ளைப்பந்து கிரிக்கெட் சாதனைகளுக்கு மாறாக, கடந்த ஆண்டிலிருந்து பயிற்சியாளராக வென்றதைவிட அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளார். இந்திய வரலாற்றில் இரண்டு உள்நாட்டுத் தொடர்களில் முழுமையாகத் தோற்ற ஒரே பயிற்சியாளரும் இவரே.
இது குறித்து பேசிய ஹர்பஜன், "இந்திய அணிக்கு பயிற்சியாளராக ஆவது எளிதல்ல. ஆண்டு முழுவதும் அணியுடன் பயணித்து, போட்டிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பல அணித் தேர்வுகள், போட்டி முடிவுகள் என கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் மிகுந்த ஈடுபாடு தேவை" என்று கூறினார்.
மேலும் ஹர்பஜன் சிங், "கௌதம் கம்பீர் அங்கு விளையாடப் போவதில்லை. அவர் விளையாடும்போது நன்றாகவே விளையாடினார். இந்தியாவுக்காக மிகச் சிறப்பாகப் பங்களித்தார். அனைவருக்கும் பொறுமை வேண்டும். ஒரு வெள்ளைப்பந்து, ஒரு சிவப்புப்பந்து என பயிற்சியாளர்களைப் பிரிக்கும் கொள்கை தேவை என்று உணர்ந்தால், இப்போதைக்கு அதைச் செய்யத் தேவையில்லை.
ஆனால், காலப்போக்கில் தேவைப்பட்டால் நிச்சயமாகச் செய்ய வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை" என்று விளக்கினார்.இதற்கிடையில், டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு வி.வி.எஸ். லக்ஷ்மனை பி.சி.சி.ஐ. அணுகியதாகச் செய்திகள் வெளியாகின, ஆனால் பிசிசிஐ இதை வெளிப்படையாக மறுத்தது. இந்திய அணி ஆகஸ்ட் 2026 வரை அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.