2020-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் எப்படியாவது 20: 20 கிரிக்கெட் போட்டிகளை இடம்பெறச் செய்துவிட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா- பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முயற்சித்தால் இது சாத்தியமாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுவதாக இருந்தாலும் சரி, அதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம்பெற வேண்டும்என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் வெற்றி கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உறுதி படுத்தியிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மேலும் வளர்க்க புதிய நாடுகளில் அதனை அறிமுகம் செய்ய வேண்டும். 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளை விட இதற்கு சிறந்த களம் வேறில்லை.
2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்னரே கிரிக்கெட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகளின் அந்தஸ்தை பெற விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அனைவரும் இதற்காக இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்நாடுகள் முயற்சி செய்தால் இந்தப் பணி சுலபத்தில் முடியும்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டால் கிரிக்கெட்டிற்கு ஒலிம்பிக் அங்கீகாரத்தை பெற்றுத்தர முடியும், என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.