அப்ரிதி அபாரம்-இலங்கையை வென்றது பாக்.
கொழும்பு: அப்ரிதியின் அபாரம் ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் பாகிஸ்தான் 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதிய டுவென்டி-20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.
பாகிஸ்தானுக்கு துவக்க வீரராக வந்த அக்மல் ஆட்டத்தின் முதல் பந்திலே டக் அவுட்டானார். சோயப் மாலிக் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த கேப்டன் அப்ரிதி, இம்ரான் நசிருடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். நசிர் 40 ரன்களுக்கு அவுட்டானார். 2 சிக்சர், 4 பவுண்டரி விளாசிய் அப்ரிதி 37 பந்தில் 50 ரன்கள் எடுத்து, துஷாரா பந்தில் அவுட்டானார். உமர் அக்மல் 30 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அப்துர் ரசாக் 25, மிஸ்பா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து பேட் செய்த இலங்கை சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் சங்ககரா 38, ஜெயசூர்யா 23 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேற, இலங்கை அணி 18.1 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. பாகிஸ்தான் 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications