பெங்களூர்: பெங்களூரில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்துள்ளது. இன்று மைக்கேல் ஹூஸே சதம் அடித்தார். இந்தியாவின் ஜாகிர்கான் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
பெங்களூரில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று கேப்டன் ரிக்கி பான்டிங் அபார சதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் அவர் அடித்த முதல் சதம் இது.
2வது நாளான இன்றும் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடியது. இன்று மைக்கேல் ஹூஸே சதம் போட்டார். சிறப்பாக ஆடிய அவர் 146 ரன்களைக் குவித்தார்.
சைமன் காடிச் 66 ரன்களை சேர்த்தார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 430 ரன்களை எடுத்திருந்தது.
இந்தியாவின் ஜாகிர்கான் 91 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மாவும் சிறப்பாக பந்து வீசி 4விக்கெட்களை சாய்த்தார்.
நாளை தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இந்தியா ஆடவுள்ளது.