சிட்னி: இந்திய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பரிதாப தோல்வியை தழுவியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 2வது டெஸ்டில் மிகுந்த கவனத்துடன் விளையாட களமிறங்கியது. 2வது டெஸ்ட் போட்டி கடந்த 2ம் தேதி புதன்கிழமை துவங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன செல்ல மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த அணியியை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அம்பயர் ஸ்டீவ் பக்னரின் தயவால் சதமடித்து சரிவிலிருந்து அணியை மீட்டார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112.3 ஓவர்களில் 463 ரன்களை குவித்தது. அதன் பின்னர் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 532 ரன்கள் எடுத்தது. சச்சின் டெண்டுல்கரும், லட்சுமணும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மாத்யூ ஹைடன் சதமடித்தார். வெற்றிக்கு 333 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் வெற்றி பெற முயற்சிக்கவில்லை. அதேசமயம், டிரா செய்யும் நோக்கிலும் கூட ஆடவில்லை. மாறாக படு வேகமாக அவுட் ஆகத் தொடங்கினர். வாசிம் ஜாபர், சச்சின், லட்சுமணன், யுவராஜ் சிங் ஆகியோர் படு வேகமாக பெவிலியன் திரும்பினார். டிராவிட் 38 ரன்களும், கங்குலி 51 ரன்களும், டோனி 38 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். போட்டியை எப்படியாவது டிரா செய்ய வேண்டும் என்று மிகவும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் அனில் கும்ப்ளேவுக்கு கம்பெனி கொடுக்கக் கூட பிற வீரர்கள் முயற்சிக்கவில்லை. ஆட்டம் முடிய 7 பந்துகளே இருந்த நிலையில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70.5 ஓவர்களில் 210 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. இறுதிவரை போராடிய கேப்டன் கும்ப்ளே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 122 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. ஆட்டநாயகன் விருது ஆண்ட்ரூ சைமண்ட்ஸூக்கு கிடைத்தது. இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. வாக் சாதனையை முறியடித்த பாண்டிங்: இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ச்சியான 16வது வெற்றியாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 16 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ரிக்கி பாண்டிங் பெற்றார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்தார். நடுவர்களின் தயவால் வென்ற ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோர் அவுட் ஆகியும் நடுவர்கள் இருவரின் தயவால் அந்த அணி வலுவான நிலையை பெற்றது. அதே போல் 2வது இன்னிங்சில் இந்திய அணியின் மூத்த வீரர்களான டிராவிட் பேட்டிங் செய்யும் போது சைமண்ட்ஸ் வீசிய பந்தில் கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் டிவி ரீப்ளேயில் பந்து டிராவிட்டின் பேட்டிலேயே படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஸ்டீவ் பக்னர் அவுட் என அறிவித்து விட்டார். இதே போல் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கங்குலி, பிரட்லீ வீசிய பந்தில் மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் இந்த கேட்சை பந்து தரையில் பட்ட பின்னரே கிளார்க் பிடித்தார். இதுவும் டிவி ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. ஆனால் நடுவர் மார்க் பென்சன் 3வது அம்பயரின் முடிவுக்கு விடாமல், பாண்டிங்கிடம் ஆலோசனை கேட்டார். பாண்டிங் அவுட் என சொன்னதால், அதை ஏற்று கங்குலிக்கு அவுட் கொடுக்கப்பட்டது. நடுவர்களின் இந்த தொடர் தவறுகளால் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கை நழுவிப் போய் விட்டது.