நாக்பூர்:
நாக்பூரில் நடந்த 6வது ஒரு நாள் போட்டியில் இந்திய போராடித் தோற்றது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அ
ணிகளுக்கு இடையே 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா 3 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தன. ஒரு போட்டி மழையால் ரத்தானது.
இன்று 6வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்தது. இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்த தொடர் முழுவதும் முதலில் பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் சென்டிமென்ட்டாக பீதியடைந்தனர்.
கில்கிறிஸ்டும், மைக்கேல் கிளார்க்கும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணியின் ஜாகீர்கான் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே கிளார்க், விக்கெட் கீப்பர் டோணியிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார்.
ஆனால் கில்கிறிஸ்ட்டும், கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இணந்து இந்திய பந்து வீச்சை அடித்து வெளுத்து விட்டனர். வேகப் பந்து வீச்சை லட்டு போல சாப்பிட்ட ஆஸ்திரேலியர்களின் வேகம், சுழற் பந்து வந்த பிறகுதான் மட்டுப்பட்டது.
இருவரும் சேர்ந்து 96 ரன்கள் எடுத்திருக்கும் போது ரிக்கி பாண்டிங் 49 ரன்கள் எடுத்து ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் கில்கிறிஸ்ட் பதான் பந்து வீச்சில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து 51 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஹோட்ஜூம், சைமண்ட்ஸூம் சேர்ந்தனர். இதில் சைமண்ட்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி சதமடித்தார். இந்திய சுழற் பந்து வீச்சாளர்கள் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். இடையில் விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
ஆனால் சைமண்ட்ஸ் மட்டும் அசராமல் ஆடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை குவித்தது.
இந்தியா தரப்பில் பதான், ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 318 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி சார்பில் கங்குலி மற்றும் சச்சின் ஆகியோர் களமிறங்கினர்.
இதுவரை நடந்த போட்டிகளில் சரியாக ஆடாத சச்சின் இப்போட்டியில் சிறப்பாக ஆடினார். மறு முனையில் கங்குலியிலும் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களைச் சேர்த்து இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினர்.
சச்சின் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டம்ப் அவுட் ஆனார். பின்னர் இர்பான் பதான், கங்குலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார்.
29 ரன்கள் எடுத்திருக்கும் போது பதான், ஹாக் பந்துவீச்சில் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின்னர் வந்த முன்னாள் கேப்டன் டிராவிட் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்பு கேப்டன் டோணியும், ராபின் உத்தப்பாவும் சேர்ந்து நன்றாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் உத்தப்பா ஜான்சன் பந்துவீச்சில் ஹோப்ஸிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 28 பந்துகளை சந்தித்து 44 ரன்களை குவித்தார். அதன் பின்னர் பின்னாலேயே டோணியும் ஆட்டமிழந்தார்.
இதனால் வெற்றி ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹாக் 4 விக்கெட்டுகளையும், ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், ஹோப்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொரை வென்று விட்டது. 7வது ஒருநாள் போட்டி மும்பையில் நடக்கவுள்ளது.
அதிரடியாக ஆடி சதம் அடித்த சைமண்ட்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.