சிட்னி: சிட்னியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடுமையாக போராடி இந்திய தோல்வியைத் தழுவியது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்புத் தொடரில் இன்று சிட்னியில் முக்கிய ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இப்போட்டியில் இந்தியா வெற்றி
பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். ஆனால் தோற்றால் இலங்கைக்கு சாதகமாக வாய்ப்புகள் திரும்பி விடும் என்ற நிலை இருந்தது.
இந்த சூழ்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எடுத்தது முதல் அதிரடியாக ஆடத் தொடங்கியது ஆஸ்திரேலியா.
தொடக்க ஆட்டக்காரரான ஆடம் கில்கிறைஸ்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மாத்யூ ஹைடனும், கேப்டன் ரிக்கி பான்டிங்கும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
ஹைடன் 54 ரன்களை எடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார். மறு முனையில் சிறப்பாக ஆடிய பான்டிங் அபார சதம் போட்டார். 124 ரன்களைக் குவித்த அவரை ஸ்ரீசாந்த் ஆட்டமிழக்க வைத்தார்.
மைக்கேல் கிளார்க் 31 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் அரை சதம் போட்டார். 59 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இறுதியில், 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 317 ரன்களைக் குவித்தனர்.
இந்தியாவின் பந்து வீச்சு இன்று எடுபடவில்லை. அதிகபட்சமாக ஸ்ரீசாந்த் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து இந்தியா ஆடத் தொடங்கியது. வழக்கம் போல சச்சின் டெண்டுல்கர் முதல் ஓவரிலேயே 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
மறு முனையில் வீரேந்திர ஷேவாக் அடித்து ஆடிக் கொண்டிருந்தார். அவருடன் கெளதம் கம்பீரும் இணைந்து அடித்து ஆடினார். இருவரும் சேர்ந்து நல்ல முறையில் ஸ்கோரைக் கொண்டு போய்க் கொண்டிருந்த நிலையில் ஷேவாக் 17 ரன்களில் வீழ்ந்தார்.
அவருக்குப் பின்னர் வந்த ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். கேப்டன் டோணி மட்டும் நின்று ஆடி கம்பீருக்கு கம்பெனி கொடுத்தார். இருவரும் சேர்ந்து சற்றே ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
கம்பீர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் போட்டார். 119 பந்துகளைச் சந்தித்த அவர் 113 ரன்களைக் குவித்தார். அவருடன் இணைந்து ராபின் உத்தப்பாவும் சிறப்பாக ஆடினார்.
கம்பீர் அவுட்டாகிச் சென்ற பின்னர் உத்தப்பா அதிரடியாக ஆடி வேகமாக ரன்களைச் சேர்த்தார். ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி பெறக் கூடிய நிலை ஏற்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உத்தப்பா அவுட் ஆகவே இந்தியாவின் வெற்றி நம்பிக்கை தகர்ந்தது.
உத்தப்பாவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய இர்பான் பதான் 21 பந்துகளில் 22 ரன்களையும், ஹர்பஜன் சிங் 11 பந்துகளில் 20 ரன்களையும் சேர்த்தனர்.
ஆனால் உத்தப்பாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு இந்தியா அடுத்தடுத்து பின் வரிசை வீரர்களை இழந்து 49.1 ஓவர்களில் 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இன்றைய பிற்பாதி ஆட்டத்தின் சிறப்பம்சம் கம்பீரின் கம்பீரமான செஞ்சுரி என்றால், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறைஸ்ட் அட்டகாசமாக செயல்பட்டு 6 பேர் அவுட்டாக காரணமாக இருந்தார். இன்றைய பீல்டிங்கில் 5 கேட்சுகளையும், ஒரு ஸ்டம்ப்டும் செய்து அசத்தினார் கில்கிறைஸ்ட்.
பிரெட் லீ அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருது ரிக்கி பான்டிங்குக்குக் கிடைத்தது.
இன்றைய போட்டியில் இந்தியா தோற்றதால், இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பு சற்றே பிரகாசமாகியுள்ளது. அந்த அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இந்தியாவைத் தாண்டி இறுதிப் போட்டிக்குப் போய் விடும். அதேசமயம், இந்தியாவுக்கு இன்னும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.