ஆஸியிடம் இந்தியா மோசமான தோல்வி!
பரோடா:
பரோடாவில் இன்று நடந்த 5வது ஒரு நாள் போட்டியில் இந்தியா படு மோசமாக ஆடி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற முன்னணியில் இருந்தது. இந்த நிலையில், இன்று பரோடாவில் 5வது ஒரு நாள் போட்டி நடந்தது.
இப்போட்டியை இறுதிப் போட்டி போல நினைத்து ஆடுவோம் என ஆஸ்திரேலியக் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். ஆனால் இந்திய வீரர்களோ, வெற்றி பெற வேண்டும் என்று எந்த முனைப்பும் காட்டியதாக, அவர்களது பேட்டிங்கின்ேபாது உணர முடியவில்லை.
பரோடா மைதானம் பேட்டிங்குக்கு ஏற்ற பிட்ச் உள்ளது. இங்கு இந்தியா இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சச்சின் டெண்டுல்கர் இங்கு 3 முறை செஞ்சுரி போட்டுள்ளார். இந்த மைதானத்தில் அதிகபட்ச தனி நபர் ரன்கள் எடுத்துள்ளதும் அவரே.
பேட்டிங் செய்ய அருமையான பிட்ச் என்று அனைவரும் கணித்திருந்த நிலையில், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை எடுத்து விளாசித் தள்ளும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
எல்லோரும் எதிர்பார்த்தபடி இந்தியாவே டாஸ் வென்றது. பேட்டிங்கையும் தேர்ந்தெடுத்தது. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது. ஆனால் பேட்டிங்கில்தான் இந்திய வீரர்கள் படு சொதப்பு சொதப்பி விட்டனர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் சரணாகதி அடைந்து ஒவ்வொருவராக படு வேகமாக பெவிலியனுக்கு நடையைப் போட்டதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர்.
கங்குலி தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். டிராவிட் ஒரு ரன் கூட எடுக்காமல் கிளம்பிப் போனார். கேப்டன் தோணியும் விரைந்து அவுட் ஆகி விட்டார். யுவராஜ் சிங்கும் நிலைத்து நின்று ஆடவில்லை.
ஆஸ்திரேலிய பந்து வீச்சின் ேவகம் தாங்க முடியாமல் இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறித் தவித்தனர். சச்சின் டெண்டுல்கர் மட்டும் ரொம்பக் கஷ்டப்பட்டு 47 ரன்களைச் சேர்த்தார். இது சச்சினுக்கு 400வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சாளர்களான பதானும் (26), ஜாகிர்கானும் (28) சற்றே ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் கொஞ்சம் போல வீரத்தைக் காட்டி ரன் சேர்த்துப் பார்த்தனர்.
அப்படியும் முழுமையாக 50 ஓவர்களை முடிக்க முடியாமல் 39.4 ஓவர்களிலேயே இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 148 ரன்களில் சுருண்டு போனது.
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் படு அபாரமாக பந்து வீசி 26 ரன்களை மட்டுமே கொடுத்த 5 விக்கெட்டுக்களை வாரினார். பிரெட் லீ சச்சின் உள்ளிட்ட 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.
கங்குலி, டிராவிட், யுவராஜ் சிங், டோணி ஆகிய முன்னணி வீரர்கள் நிலைத்து ஆட முடியாமல் போனதால் இந்தியாவின் நிலை படு மோசமாகிப் போனது.
ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சைப் போல பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. மொத்தத்தில் ஏற்கனவே முடிவை முடிவு செய்து விட்டு வந்தவர்கள் போல படு நேர்த்தியாக திட்டமிட்டு ஆடிக் கலக்கினர் ஆஸ்திரேலியர்கள்.
பின்னர் ஆஸ்திரேலியா தனது வெற்றி வேட்டையைத் தொடங்கியது. கடந்த போட்டிகளில் சரிவர ஆடாமல் இருந்த கில்கிறைஸ்ட் இந்தப் போட்டியில் பின்னி எடுத்து விட்டார். குறிப்பாக முரளி கார்த்திக்கை பதம் பார்த்து விட்டார்.
கார்த்திக்கின் ஒரு ஓவரில் 3 சிக்சர்களை அடித்து பயமுறுத்தினார். மொத்தம் பத்து பவுண்டரிகள், நான்கு சிக்சர்களுடன் அதிரடியாக ஆடினார் கில்கிறைஸ்ட்.
அபாரமாக ஆடிய கில்கிறைஸ்ட் 77 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடி நாயகன் மாத்யூ ஹெய்டனை ஆர்.பி.சிங் வீழ்த்தினார்.
ஆனால் கில்கிறைஸ்ட்டுடன் கேப்டன் பாண்டிங் 39 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் ெசன்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரை வெல்லும் உறுதியான நிலைக்கு ஆஸ்திரேலியா வந்து விட்டது. அடுத்து நாக்பூர் (அக்டோபர் 14), மும்பை (அக்டோபர் 17) ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள மீதமுள்ள இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால்தான் இந்தத் தொடரை சமண் செய்ய முடியும். ஆனால் இன்னும் ஒரு போட்டியில் ஜெயித்தால் கூட ஆஸ்திரேலியா தொடரைத் தட்டிச் சென்று விடும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications