For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்களிடம் பேச அசாருதீனுக்குத் தடை

By Staff
Azharuddin
கொல்கத்தா: கொல்கத்தா வந்த முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் பேச முயன்றபோது அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி தடுத்து அங்கிருந்து போகுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூதாட்டப் புகாரில் சிக்கிய அசாருதீன் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆயுட் காலத் தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அசார் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்டு விட்டார்.

தற்போது அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளூர் அணிக்குப் பயிற்சி டிப்ஸ் அளிக்குமாறு அழைத்துள்ளது. இந்த இங்கிலாந்து அணி அடுத்த வாரம் இந்தியா வருகிறது. சென்னைக்கு வரும் இந்த அணிக்கு பயிற்சி டிப்ஸ் அளிப்பதற்காக வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அசார் சென்னைக்கு செல்லவுள்ளார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியைக் காண வருமாறு கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் அசாருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று அவரும் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கசப்பான ஒரு அனுபவத்தை அசார் சந்திக்க நேர்ந்தது. அசாரும், இந்திய தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் மற்றும் கொல்கத்தா கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இந்திய வீரர்கள் இருந்த அறைக்குச் சென்றனர்.

அங்கிருந்த முரளி கார்த்திக் உள்ளிட்ட சில வீரர்களுடன் அசாருதீன் கேஷுவலாக பேசினார். அப்போது வேகமாக அங்கு வந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரியும், முன்னாள் சிபிஐ அதிகாரியுமான விர்க், அசாருதீனை தடுத்து நிறுத்தினார்.

வீரர்களுடன் பேசக் கூடாது, இந்த அறைப் பக்கம் கூட வரக் கூடாது என்று அசாருதீனை அவர் அறிவுறுத்தி அங்கிருந்து போகுமாறு கூறினார். இதை எதிர்பார்க்காத அசார், சட்டென்று சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அசார் பேசுகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் அணிக்கு சில டிப்ஸ்களைத் தருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நான் சென்னை செல்கிறேன்.

முழு நேரப் பயிற்சியாளராகும் விருப்பம் என்னிடம் உள்ளது. அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பினும், எந்த வீரரோ அல்லது அணியோ அல்லது கிரிக்கெட் வாரியமோ என்னை பயிற்சி அளிக்க அழைத்தால் கண்டிப்பாக அதை ஏற்பேன் என்றார் அசார்.

அசாரை தடுத்து நிறுத்திய விர்க், தெற்காசிய கிரிக்கெட் அணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசிய கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிகளை அவர் நேரடியாக சென்று கண்காணிப்பார். வீரர்களின் நடமாட்டம் குறித்தும் அவர் ஒரு கண் வைத்திருப்பார்.

அணியினர் சம்பந்தப்படாத யாரும் வீரர்களுடன் பேசுவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை செய்துள்ளது. குறிப்பாக போட்டி நடக்கும்போது அது அனுமதிக்கப்படாது என்று ஐசிசி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன்சிங் பந்தை எறிகிறார்: பிஷன்சிங்

இந் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்,

ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கிறது. அவர் பந்தை எறிகிறார். முரளீதரன் பந்து வீச்சுக்கும், அவரது பந்துவீச்சுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவரையும் குருட்டுப் பார்வையுடன் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பார்க்கிறது.

ஏராளமான ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் பந்தை எறிவது அதைவிட மோசமானது என்று கூறியுள்ளார்.

இத்தனைக்கும் ஹர்பஜனும் பேடியும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+