இஸ்லாமாபாத்: கெளதம் கம்பீருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், அவர் மேலும் பக்குவப்படுவார். தனது தவறுகளை திருத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பு என பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பீர் சிறந்த பார்மில் உள்ளார். இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் அவருக்கும், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஷான் வாட்சனுக்கும் இடையே மோதல் மூண்டு, அதில் ஒரு போட்டியில் விளையாட கம்பீருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்று நாக்பூரில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில் கம்பீர் விளையாட முடியாமல் போனது. இந்த நிலையில் ஏற்கனவே கம்பீருடன் மோதிய அனுபவம் கொண்ட ஷாஹித் அப்ரிதி, கம்பீர் தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கான்பூரில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியின்போதுதான் கம்பீருக்கும், அப்ரிதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அப்ரிதி கருத்து தெரிவிக்கையில், கான்பூரில் செய்த அதே தவறைத்தான் இப்போது வாட்சன் விவகாரத்திலும் கம்பீர் செய்துள்ளார். நான் அப்போது பந்து வீசினேன். கம்பீர் ரன் எடுக்க ஓடினார். இருவரும் அப்போது சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டோம். ரன் எடுத்து விட்டு திரும்பிய கம்பீர் என்னைப் பார்த்து சில வார்த்தைகளைக் கூறினார். நானும் பதிலுக்கு அவரிடம் சில வார்த்தைகளை கூறினேன். இருப்பினும் எங்கள் இருவரையும் கண்டித்து அபராதம் விதித்ததோடு விட்டு விட்டனர். பின்னர் இருவரும் பேசி சமாதானமாகி விட்டோம். கம்பீர் சற்று டென்ஷனானவர். எப்போதும் சூடாக இருப்பவர். வார்த்தைகளை விடுவதற்குத் தயங்காதவர். இருப்பினும் இந்த தடை, அவரை அமைதிப்படுத்தும். பக்குவப்படுத்தும். கோபத்தைக் குறைக்க உதவும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாத அளவுக்கு அறிவுப்பூர்வமான கிரிக்கெட் வீரராக அவர் உருவெடுக்க உதவும். கடந்த காலங்களில் நானும் கூட தவறுகள் செய்துள்ளேன். பின்னர் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டேன். கம்பீரும் அப்படியே மாறுவார் என நம்புகிறேன். சச்சினும், கும்ப்ளேவும் மிகச் சிறந்த வீரர்கள். இளம் வீரர்கள் அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ளலாம். இருவரும் நன்னடத்தைக்குப் பெயர் போனவர்கள். சிறந்த வீரர்களாகவும், நன்னடத்தை கொண்டவர்களாகவும் இருப்பது மிகவும் கடினம். ஆனால் சச்சினும், கும்ப்ளேவும் அதை செய்து காட்டியவர்கள். எதிராளிகளுடன் ஒருபோதும் அவர்கள் மோதல் போக்கில் ஈடுபட்டதில்லை. கும்ப்ளேவை எனக்கு அதிகம் பிடிக்கும். ஒரு பந்து வீச்சாளராக, ஒரு சிறந்த வீராக அவரை நான் மதிக்கிறேன். கும்ப்ளேவின் ஓய்வு இந்தியாவுக்கு மிகப் பெரிய பலவீனமாகும் என்றார் அப்ரிதி.