மும்பை: ஐசிஎல் அமைப்பில் இணைந்த வீரர்கள் அதிலிருந்த விலகினால் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும். அவர்கள் உடனடியாக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டுக்கு எதிராக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) என்ற அமைப்பு கபில் தேவ் தலைமையில் துவக்கப்பட்டது. இதன் சார்பில் டுவென்டி-20 உள்ளிட்ட தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பில் பாகிஸ்தானின் இன்சமாம், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் சேர்ந்தன. பல மாநிலங்களை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் இணைந்தனர். இந்நிலையில் இந்த அமைப்பில் இணைந்த வீரர்கள் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
இதையடுத்து அவர்கள் சர்வதேச போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவானது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங் மனோகர், ஐபிஎல் வீரர்கள் மீதான் தடை நீக்கப்படும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
சமீபத்தில் ஐசிஎல் அமைப்பில் இணைந்த சில வீரர்கள் எங்களிடம் வந்து தாங்கள் தவறு செய்துவிட்டதாகவும், தங்கள் மீது விதித்திருக்கும் தடையை நீக்குமாறும் கேட்டு கொண்டனர். அதன்படி ஐசிஎல் அமைப்பில் இருந்து வெளியேறும் அனைத்து வீரர்கள் மீதான் தடை நீக்கப்படும்.
இந்த வீரர்கள் உடனடியாக உள்ளூர் போட்டிகளில் விளையாடலாம். ஆனால், அவர்கள் ஒரு ஆண்டுக்கு பின்னரே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும். அந்த அமைப்பிலிருந்து விலகி வரும் வீரர்களை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தடை நீக்கம் வரும் மே 31ம் தேதிக்குள் அந்த அமைப்பை விட்டு விலகும் வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார்.