ஐசிசி முடிவு - பிசிசிஐ வரவேற்பு
டெல்லி: ஸ்டீவ் பக்னரை நீக்க ஐச்சி முடிவு செய்திருப்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேபோல ஹர்பஜன் சிங் மீதான தடையையும் நீக்க வேண்டும் என அது கோரியுள்ளது.
பக்னர் நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐச்சியின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைத்த வெற்றி.
இன்று மாலை கூடும் வாரிய செயற்குழுக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ஹர்பஜன் சிங் மீதான புகாரை திரும்பப் பெறும் வரையில் வாரியம் போராடும். ஹர்பஜன் சிங் விவகாரத்தை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். நடுவர் பிரச்சினையை விட அதுதான் மிகவும் முக்கியமானது. காரணம், இது இனவெறிப் புகார். இதை எந்த வகையிலும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இதுகுறித்து ஏற்கனவே அப்பீல் செய்யப்பபட்டுள்ளது. அதன் முடிவை அறிய காத்துள்ளோம்.
பக்னரால்தான் சிட்னி டெஸ்ட்டில் இந்தியா தோற்றது. இப்போது அவர் மாற்றப்பட்டிருப்பதால் எங்களுக்கு மட்டுமல்ல, அணியினருக்கும் கூட நிம்மதியாக உள்ளது என்றார்.
வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், போட்டி நடுவர் மைக் புராக்டர் நடந்து கொண்ட விதம் எங்களுக்கு மிகவும் அதிருப்தியைத் தந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டுள்ளார்.
எங்களுக்கு ஹர்பஜன் விவகாரம்தான் முக்கியமானது. அவர் மீதான புகாரை விசாரிக்க நடந்த கூட்டம் முறையாக நடக்கவில்லை. அதையும் கூட நாங்கள் புகாராக ஐசிசியிடம் தெரிவித்துள்ளோம். ஹர்பஜன் சிங் மீதான தடையை ஐசிசி நீக்க வேண்டும் என்றார்.
பக்னர் நீக்கப்பட்டுள்ளதாலும், ஹர்பஜன் சிங் பெர்த் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைத் தொடர இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications