லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது வருத்தம் அளிக்கிறது. இதற்காக ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்து சூப்பர்-8 போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதை கோப்பை வெல்ல வேண்டும் என்ற இநதியர்களின் கனவு தகர்ந்து போனது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது டோணி கூறுகையில்,
எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயன்றோம். எங்களிடம் அனுபவம் நிறைந்த வீரர்கள் சிலர் இருந்தாலும், நேற்று எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இதற்காக இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இந்திய ரசிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். அவர்களை விட இந்த தோல்வி எங்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடியதன் காரணமாக வீரர்கள் களைத்து போய்விட்டார்கள் என்று கூற முடியாது. அதை கூறி யாரும் தப்பிக்க முடியாது.
இந்த தொடரில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும். எனது பேட்டிங்கும் அதிரடியாக இல்லை. என்னால் பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. அடுத்து வரும் போட்டிகளில் சிக்சர்கள் விளாசுவேன்.
இந்தியாவின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. எளிய இலக்கை எட்டாதது ஏமாற்றம். பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு காரணம்.
பவுன்சர் சிக்கல்...
இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பவுன்சர்களை வேகம் கூட்டியும், குறைத்துமாக வீசியதால் அவர் வீசிய 22 பவுன்சர்களில் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதிலிருந்து நல்ல பாடம் பெற்றோம். பவுன்சர்களை சிக்சராக மாற்றுவது எப்படி என்பதை விரைவில் கற்றுக்கொள்வோம்.
2007ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் வெளியேறியது தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான நாள். இது அதற்கடுத்து சோகமானது.
அடுத்த டுவென்டி-20 உலக கோப்பை வரும் ஏப்ரலில் வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. இதில் சிறப்பாக விளையாடி கோப்பை வெல்வோம்.
ஷேவாக் இல்லாதது இழப்பு...
ஷேவாக் இல்லாதது பெரும் இழப்பு. அவரது இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. அவர் அணியில் இருந்தாலே எதிரணி பவுலர்களின் மன தைரியம் குறைந்துவிடும் என்றார் டோணி.