பெங்களூர்: விளம்பர படம் ஒன்றில் இந்து கடவுள் போன்று போஸ் கொடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி நாட்டில் உள்ள இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கூறி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஜெயகுமார் ஹிரேமத் என்பவர் பெங்களூரில் உள்ள 6வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி ஒரு விளம்பர படத்தில் இந்து கடவுளான விஷ்ணு போன்று தனது கைகளில் ஷூ உள்பட பல பொருட்களை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்து கடவுளை அவமதித்ததுடன், நாட்டில் உள்ள இந்துக்களின் மன உணர்வுகளை காயப்படுத்திவிட்டார் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகார் மனுவின்பேரில் மாஜிஸ்திரேட் சூரி கான் டோணி மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் வரும் 12ம் தேதி நீதிமன்றத்தில் வாதியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.