For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி-உதவிய இந்தியாவுக்கு நன்றி!

By Staff

கராச்சி: பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலேயே நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த நெருக்கடியால் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 11ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. ஆனால் பாதுகாப்பு அம்சங்களைக் காரணம் காட்டி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் விளையாட தயக்கம் காட்டின.

போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் விளையாட வருவது கஷ்டம். பேசாமல் வேறு நாட்டுக்கு போட்டியை மாற்றுமாறு இந்த நாடுகள் கோரின. இதையடுத்து போட்டித் தொடரை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்ற ஐசிசி முடிவு செய்தது.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தனக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களம்இறங்கியது. பாகிஸ்தானில்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த வேண்டும். வேறு நாட்டுக்கு மாற்றினால் அதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என இந்தியா அறிவித்தது.

இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு இலங்கை, வங்கதேசம், மேற்கு இந்தியத்தீவுகள் உள்ளிட்ட பல நாட்டு அணிகளும் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து ஐசிசியின் ஆலோசனைக் கூட்டம் துபாயில் நடந்தது. இக்கூட்டத்தில், அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் ஐசிசி ஆலோசனை நடத்தியது.

இந்த இடத்திலும் இந்தியா தனது நிலையை வலியுறுத்தியது. பாகிஸ்தானில்தான் போட்டி நடத்தப்பட வேண்டும் என இந்தியா உறுதிபடத் தெரிவித்தது. இதையடுத்து போட்டித்தொடர் பாகிஸ்தானிலேயே திட்டமிட்டபடி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்ட மைதானங்களில் போட்டி நடத்தப்படும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டியையும் ஐசிசி அமைத்துள்ளது. இதில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் மோர்கன், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவார், ஐசிசி தலைமை செயலதிகாரி ஹாரூன் லோர்காட், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அஷ்ரப், ஐசிசியின் முதன்மை ஆலோசகர் ஐ.எஸ்.பிந்த்ரா, டிவி ஒளிபரப்பாளர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானிலேயே நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் உறுதுணையாக இருந்ததாக அது இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளது.

ஆனால் ஐசிசியின் முடிவு குறித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. தங்களது நாட்டு வீரர்கள் பலர் பாகிஸ்தானில் விளையாட விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+