அந்த பேட்டுதாம்ப்பா நமக்கு வெற்றி தேடித் தந்துசுச்சாம்...!
போர்ட் ஆப் ஸ்பெயின்: கேப்டன் டோணி மீண்டும் வந்து விளையாடியதால் மட்டுமல்ல, அவர் கடைசி ஓவரில் பேட்டை மாற்றி புதிய பேட்டை பயன்படுத்தியதாலும்தான் இந்தியா அபார வெற்றி பெற முடிந்ததாம்.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த முத்தரப்புத் தொடரில் செல்கான் மொபைல் கோப்பையை இந்தியா ஸ்டைலாக வென்றுள்ளது.
முதல் இரு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும் அடுத்த இரண்டு சுற்றுப் போட்டிகளில் ஜில்லென்று ஜெயித்து, இறுதிப் போட்டியில் இலங்கையை சுள்ளென்று வீழ்த்தி, ஜம்மென்று சாம்பியனாகி விட்டது இந்தியா.
ரசிகர்களுக்கு இதில் பரம சந்தோஷம்.. மறுபடியும் இந்தியாவின் கோப்பை வெற்றிக்கு கேப்டன் டோணி காரணமாக அமைந்தார் என்பதால்.

கடைசி ஓவரில் செம பிரஷர்...
இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் இந்தியாவுக்குத் தேவைப்பட்டது.

இருப்பதோ ஒரு விக்கெட்
இந்தியாவின் கையிலோ ஒரே ஒரு விக்கெட் மட்டுமே பாக்கி இருந்தது. களத்தில் டோணியும், இஷாந்த் சர்மாவும் இருந்தனர். பார்த்து சூதானமாக விளையாட வேண்டிய நிலை.

வச்சாருல்ல ஆப்பு...
ஆனால் டோணியோ வழக்கம் போல மகா அமைதியாக, புத்தரை விட மிகப் பொறுமையாக பந்துகளை எதிர்கொண்டார். அவரது நேர்த்தியான ஆட்டத்தால் இந்தியா வெற்றி இலக்கைத் தாண்டியது.

அந்த பேட்டுலதான் இருக்கு சூட்சுமம்
கடைசி ஓவரின்போது டோமி தனது பேட்டை மாற்றினார். அந்த பேட் சற்று எடை அதிகமான பேட்டாகும். அதை வைத்துத்தான் அவர் கடைசி ஓவரை எதிர்கொண்டார்.

முதல் பந்து வைட்...
சமிந்தா எரங்கா பந்து வீசினார். முதல் பந்து வைட் ஆனது.

ஆனால் அடுத்த 3 பந்துகளில் சரவெடி
அடுத்த 3 பந்துகளையும் பிரித்து மேய்ந்து விட்டார் டோணி. இந்த மூன்றே பந்துகளில் அவர் 16 ரன்களை எடுத்து வெற்றி தேடித் தந்து விட்டார்.

இந்த பேட்டுதான் சரி...
தனது பேட் மாற்றம் குறித்து டோணி கூறுகையில், சற்று எடை அதிகமான பேட்டை கடைசி ஓவரில் பயன்படுத்தினேன். அதுதான் பந்தை அடித்து விரட்ட சரியானதாகும். எனவேதான் அதை தேர்வு செய்தேன் என்றார் டோணி.

ஆட்டமிழக்காமல் 45
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார் டோணி.

எப்படியோ மிச்சம் வச்சு ஜெயிச்சாச்சு...
கடைசி ஓவரில் 2 பந்துகளை மீதம் வைத்து கோப்பையை வென்றது இந்தியா. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியனும் ஆனது.


Click it and Unblock the Notifications