கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்காக வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலுக்கு எதிராக கங்குலி ரசிகர்கள் போராட்டம் நடத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் பயிற்சியாளராக கிரேக் சேப்பல் இருந்தபோது கங்குலி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கிரிக்கெட் ஆட லாயக்கில்லை என்று வர்ணித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக சேப்பல் பொறுப்பேற்றுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள ஜெய்ப்பூர் அணிக்கு (ராஜஸ்தான் ராயல்ஸ்) இளம் வீரர்களைத் தேர்வு செய்வதற்காக அவர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்.
அவர் கொல்கத்தா வந்த வரை பிரச்சினை இல்லை. ஆனால் கங்குலிக்குச் சொந்தமான கிரிக்கெட் அகாடமிக்கு வந்ததுதான் சிக்கலாகி விட்டது. அங்கு இளம் வீரர்களைப் பார்வையிட்டு தேர்வு செய்தார் சேப்பல்.
இந்தத் தகவல் பரவியதும் கங்குலியின் ரசிகர்கள் அங்கு விரைந்தனர். சேப்பலே கொல்கத்தாவை விட்டு வெளியேறு, சேப்பல் போக வேண்டும் என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கங்குலிக்கு எதிராக சதி செய்தவர் சேப்பல். அவரை நாங்கள் இங்கு காண விரும்பவில்லை என்று ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இந்த எதிர்ப்பு வெளியில் நடந்து கொண்டிருக்க உள்ளே இளம் வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் சேப்பல் தீவிரமாக இருந்தார். உ.பி, மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த 487 இளம் வீரர்களிலிருந்து 12 பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 8 பேட்ஸ்மென்களை சேப்பல் தேர்வு செய்தார்.