
சென்னை எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. அப்போது அரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் ஒருவருக்காக காத்திருந்தனர். அவர் எப்பொழுது வருவார் என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். அந்த நேரம் பார்த்து களத்தில் இருந்த சேவாக் அவுட் ஆனார்.
அவர் அவுட் ஆனதும் சச்சின் பேட்டைத் தூக்கிக் கொண்டு கிரவுண்டுக்குள் தான் நுழைந்தார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அரங்கத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி கரகோஷமிட்டனர். பிட்ச்சில் வந்து நின்ற சச்சின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர்.
சொல்லவா வேண்டும் ரசிகர்களின் கரகோஷத்தை. அதன் பிறகு அவர் ஒரு ரன் எடுத்தார். சச்சின் சிறிது நேரம் விளையாடினாலும் ரசிகர்களுக்கு அவர் ஆட்டம் தான் பெரிதாகத் தெரிந்தது.
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது சென்னை-மும்பை அணிகள் மோதியபோது கூட சென்னை ரசிகர்கள் சச்சினுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.