
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் இடையிலான ஐபிஎல் இன்றைய போட்டி நடைபெறுவதற்கான தடங்கல் விலகியுள்ளது.
மொத்தம் 9 ஸ்டாண்டுகளுக்குரிய அனுமதியை பொதுப்பணித்துறை வழங்கவில்லை. இதையடுத்து ஐ, ஜே., கே ஆகிய மூன்று காலரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து விட்டனர்.
மாநகராட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்கும், ஸ்டாண்டுகளின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடு உள்ளதாக அரசு காரணம் கூறியுள்ளது.
சீல் வைப்பைத் தொடர்ந்து நேற்று உச்சநீதிமன்றத்தை அணுகியது கிரிக்கெட் சங்கம். இதுதொடர்பான மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் செளகான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அவசர மனுவாக இதை எடுத்து விசாரிக்க ஒப்புக் கொண்டது.
கிரிக்கெட் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே 7 போட்டிகள் எந்தவித இடையூறும் இன்றி நடத்தப்பட்டு விட்டது. மேலும் இன்று நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. எனவே இந்த 3 கேலரிகளில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.செளகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 3 கேலரிகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று சென்னை மாநகராட்சி சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தகுந்த அனுமதியின்றி போட்டிகளை நடத்த மாட்டோம் என்று கிரிக்கெட் சங்கம் சார்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்று ஒருநாள் மட்டும் மூன்று கேலரிகளை பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.