
ஐபிஎல் போல இப்போது ஆளாளுக்கு பந்தையும், பேட்டையும் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டனர். இலங்கையில் ஒரு லீக் போட்டி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல வங்கதேசத்திலும் ஒரு பிரீமியர் லீக் போட்டி தொடங்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக நடந்த இந்தத் தொடரில் தற்போது இறுதிப் போட்டி வந்து விட்டது. இதில் விளையா டாக்கா கிளாடியேட்டர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
டாக்கா கிளாடியேட்டர்ஸ் அணியின் முக்கிய வீரரான கெய்ல் அபாரமாக ஆடி போட்ட சதத்தால்தான் அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
51 பந்துகளைச் சந்தித்த அவர்114 ரன்களைக் குவித்து விட்டார். இதில் கடைசி 87 ரன்களை வெறும் 22 பந்துகளில் அவர் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மேற்கு இந்தியத்தீவுகளும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் மோதின. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டியில் கெய்ல் மொத்தமே 18 ரன்கள்தான் எடுத்திருந்தார். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் ரசிகர்களின் வசவுகளை வாங்கிக் குவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
டாக்காவில் நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியில் டாக்கா கிளாடியேட்டர்ஸும், ஷைலெட் ராயல்ஸ் அணிகளும் மோதின.
கெய்லின் புயல் வேக ஆட்டத்தை சமாளிக்க முடியாமல், நிறுத்த முடியாமல் ஷைலெட் ராயல்ஸ் வீரர்கள் திணறினர். 7 பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியும் கெய்லின் ரன் மழையை தடுக்க முடியவில்லை. தனது ஆட்டத்தின்போது 12 சிக்ஸர்களை விளாசி அனைவரையும் அதிர வைத்தார் கெய்ல்.
கடைசியாக நபி என்ற பந்து வீச்சாளர், 19வது ஓவரின்போது கெய்லை ஆட்டமிழக்கச் செய்து ஷைலெட்டுக்கு சற்றே நிம்மதி தேடித் தந்தார்.