டெல்லி: இந்தியாவின் ஸ்கோருக்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவும் ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியைக் கேள்விக்குறியாக்கி விட்டது. மைக்கேல் கிளார்க் அபாரமாக ஆடி சதம் போட்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 613 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியா இந்தியாவின் ரன் குவிப்புக்குப் பதிலடியாக அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வருகிறது.
ஹெய்டன் 83, பான்டிங் 87, காடிச் 64, ஹூஸே 53, வாட்சன் 36 ரன்களைக் குவித்தனர். மைக்கேல் கிளார்க் சிறப்பாகவும், நிதானமாகவும் ஆடி சதம் போட்டார். 112 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.
காமரூன் ஒயிடன் தன் பங்குக்கு 44 ரன்களைக் குவித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிறப்பான ஆட்டத்தால், அந்த அணி பாலோ ஆனை வெற்றிகரமாக தவிர்த்து விட்டது.
இந்தியாவின் ஸ்கோரைக் கடந்து விடுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 577 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.
வீரேந்திர ஷேவாக் நீண்ட நாளைக்குப் பிறகு சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
விரல் காயம் காரணமாக அவதிப்பட்ட நிலையிலும் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை ஒடுக்க உதவினார் கேப்டன் கும்ப்ளே. அமீத் மிஸ்ரா தன் பங்குக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.