ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அணிகள் இடையேயான 5 போட்டிகளில் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
2வது போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாம்ப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இந்திய வீரர்களை ஜிம்பாப்வேயின் பந்து வீச்சு தடுமாற வைத்தது.

100வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித் ஷர்மா 1 ரன் எடுத்த நிலையில் 2வது ஓவரிலேயே அவுட் ஆனார். கேப்டன் கோஹ்லியும் கூட 14 ரன்களில் அவுட் ஆனார். அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த அம்பாத்தி ராயுடுவோ 5 ரன்களிலேயே பெவிலியனுக்கு நடை கட்டிவிட்டார். இதேபோல் சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களில் வெளியேறிவிட 4 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
பின்னர் களமிறங்கிய ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஜோடி இந்திய அணியை சரிவ் இல் இருந்து மீட்டது. ஒருவழியாக 24.4வது ஓவரில் 100 ரன்களை எட்டடியது. பின்னர் அணியின் ஸ்கோரை இந்த ஜோடி விறுவிறுவென உயர்த்தியது.
இந்திய ணியின் ஸ்கோர் 232 ரன்களை எட்டிய போது, தினேஷ் கார்த்திக் 69 ரன்களை எடுத்திருந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய ஜோடி ஒன்று 5-வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன். 2002-ம் ஆண்டு யுவராஜ்சிங்-தினேஷ் மோங்கியா ஜோடி 158 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
116 ரன்கள் எடுத்த நிலையில் தவான் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. கடைசி 15 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 135 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான சிகந்தர் ராசாவும், சிபாண்டாவும் முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். 20 ஓவர்களில் ஜிம்பாப்வே ஒரு விக்கெட்டு இழப்புக்கு 109 ரன்களுடன் வலுவான நிலையில் நின்றது.
இந்திய வீரர்களை அலற வைத்த சிபாண்டாவை உனட்கட் ஒரு வழியாக வெளியேற்றினார். செய்தார். ஆனால் 24 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை இழந்ததால் ஜிம்பாப்வே நிலைகுலைந்தது. 50 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணியால் 9 விக்கெட்டுக்கு 236 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.