ஒரு நாள் முத்தரப்புத் தொடர் நாளை தொடக்கம்-நியூசிலாந்துடன் இந்தியா முதல் மோதல்

கடந்த 2 ஆண்டுகளில் இலங்கையில் பங்கேற்ற ஒரு நாள் தொடர்களில் இரண்டு இரு தரப்பு தொடர், ஒரு முத்தரப்புத் தொடர் மற்றும் ஆசிய கோப்பையை வென்றுள்ளது இந்தியா. அந்த வகையில் ஒரு நாள் போட்டிகளில் வலுவாக இருக்கும் இந்தியா, நாளை தொடங்கும் முத்தரப்புத் தொடரிலும் கோப்பையை வெல்ல மும்முரமாக உள்ளது.
நாளை நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது இந்தியா. தம்புல்லாவில் பகல் இரவுப் போட்டியாக இது நடைபெறுகிறது.
இந்தப் போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். ஆகஸ்ட் 28ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.
கடந்த வாரம் கொழும்பில் முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில்வென்று தொடரை சமன் செய்து சற்று தெம்புடன் காணப்படுகிறது இந்தியா.
முத்தரப்புத் தொடரில் இந்திய அணியில் சச்சின், ஹர்பஜன் சிங், கெளதம் கம்பீர் ஆகியோர் இடம் பெறவில்லை.
திணேஷ் கார்த்திக்கும், வீரேந்திர ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கலாம்.
யுவராஜ் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் மத்திய வரிசை சற்று பலம் பெற்றுள்ளது.
இவர்கள் போக டோணி, சுரேஷ் ரெய்னா,ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து நல்ல பலத்துடன் இலங்கை வந்துள்ளது. கேப்டன் டேணியல் வெட்டோரி, பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் அணியில் இல்லாவிட்டாலும் கூட ராஸ் டெய்லர், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம், பிராட்லி ஜான் வாட்லிங் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை சங்கக்காரா, திலகரத்னே தில்ஷன், மஹிளா ஜெயவர்த்தனே ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர்.
முரளிதரன், வாஸ் என பெருந்தலைகள் அணியில் இல்லை. இதனால் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications