
சச்சின் ஓய்வு குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், இந்திய கிரிக்கெட் குறித்து உண்மையிலேயே சச்சின் அக்கறையுடன் உள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு வேளை மீடியாக்களில் வந்த அவர் குறித்த விமர்சனங்கள் அவரது முடிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இருப்பினும் தனது உடல் எப்படி இருக்கிறது என்பது எல்லோரையும் விட அவருக்குத்தான் நன்கு தெரியும் என்றார் கவாஸ்கர்.
இதேபோன்ற கருத்தை மற்ற முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகாந்த் கூறுகையில், இது ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தான் போட்டியில் அவர் விளையாடியிருக்கலாம். பரவாயில்லை. இந்த முடிவு அவராக எடுத்த சொந்த முடிவு என்பதால் நாம் அதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும் என்றார்.
முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், இது சச்சினின் சொந்த முடிவு. ஆனால் இது வியப்பாக உள்ளது. இந்திய கிரிக்கெட் உலகுக்கு சச்சினின் ஓய்வ நிச்சயம் பாதகமானதே. விமர்சனங்களும் அவரை இந்த முடிவுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றார்.
அனில் கும்ப்ளே கூறுகையில், இனி இந்திய அணியில் சச்சின் இல்லை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இது அவருக்கு நிச்சயம் நிம்மதியைத் தரும் என்றார்.