
42வயதாகும் குருநாத் மெய்யப்பன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனருமான சீனிவாசனின் மருமகன். சீனிவாசன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் கூட. குருநாத் மெய்யப்பன், நாடறிந்த ஏ.வி.எம். எனும் சினிமா தயாரிப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது ட்விட்டர் பக்கத்தில் ஏவிஎம் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்று பதிவு செய்திருக்கிறார்.
குருநாத்தைப் பொறுத்தவரையில் தாத்தா காலத்தில் இருந்து தமது குடும்பம் செய்து வரும் சினிமா தொழிலைத் தொடர விருப்பமில்லையாம்.. அவரைப் பொறுத்தவரையில் கோல்ஃப் விளையாட்டுதான் விருப்பமாம்..அப்புறம் மோட்டார் ரேசிங்... குருநாத் மெய்யப்பன்னின் தந்தை ஏவிஎம் பாலசுப்பிரமணியன், பராகுவே நாட்டு கெளரவ தூதராக, தென்னிந்திய தொழில் வர்த்தக சபை தலைவராக இருந்தவர்..
குருநாத் மெய்யப்பனின் கோல்ஃப் விளையாட்டு ஆர்வம்தான் சீனிவாசன் குடும்பத்துக்குள் அவர் நுழையவும் காரணமாக இருந்தது..சீனிவாசனின் மகள் ரூபாவை கோல்ஃப் விளையாட்டு மூலமாக சந்தித்த குருநாத் அப்படியே காதல் கொண்டிருக்கிறார். 2001ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது 2 மகள், ஒரு மகன் இருவருக்கும் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியாக குருநாத் நியமிக்கப்பட்ட நிலையில், கேப்டன் டோணியுடன் மிக நெருக்கமானார். இருவரும் இணைந்துதான் மோட்டார் ரேஸ் உள்ளிட்ட பலவற்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்.