தொடர் தோல்வியால் கோபம் - டோணியைக் கிண்டலடித்த ரசிகர்கள்
நாட்டிங்காம்: டுவென்டி 20 உலகக் கோப்பையின் சூப்பர் எட்டு ஆட்டங்களில் தொடர்ந்து 3 தோல்விகளை வாரிக் கட்டிக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை, நாட்டிங்காமில் இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து கேலி செய்தனர்.
ஆனால் இதுபோன்ற கேலியும், கிண்டலும் தன்னை எந்த வகையிலும் பாதிக்காது என்று டோணி துடைத்தெறிந்து விட்டார்.
நேற்று கடைசியாக நடந்த 3வது சூப்பர் எட்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
இந்த நிலையில் போட்டி முடிவில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது டோணியை, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கேலி செய்து கிண்டலடித்தனர்.
இதுகுறித்து டோணி கூறுகையில், இதுபோன்று கேலி செய்வது முதல் முறையல்ல. 2007ல் உலகக் கோப்பையை நாங்கள் இழந்தபோதும் கூட என்னைக் கிண்டலடித்தனர். ஏன், எனக்கு இறுதி மரியாதை கூட அப்போது செய்து விட்டனர்.
இதற்காக நான் வருத்தப்படவில்லை. ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே இது. இது என்னை பாதிக்காது.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு மூத்த வீரர் என்னிடம் கூறினார். யாராவது உன்னைப் பாராட்டினால் உடனே சொர்க்கத்துப் போய் விடாதே. நீ ஒருவேளை கீழே விழுந்தால், அது உனக்கு நல்லதல்ல. எனவே எப்போதும் ஒரே மாதிரியாக இரு என்று கூறினார். அவ்வாறே இருக்க நானும் முயற்சிக்கிறேன் என்றார் டோணி.


Click it and Unblock the Notifications