டோணிக்கு செய்த தவறுகள் என்ன?-ரசிகர்கள் குமுறல்

வெறும் 3 ரன்களில் சூப்பர் எட்டு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்தியா. நடப்புச் சாம்பியனான இந்தியா இந்த முறை, அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் முடங்கிப் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கேப்டன் டோணியின் சில தவறான முடிவுகளால்தான் தோல்வி அடைய நேரிட்டதாக ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகின்றனர்.
டோணி மூன்று தவறுகளை செய்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அது -
1. பவுன்சர்களை சந்திக்கவே பயந்த ரவீந்திர ஜடேஜாவை 4வது வீரராக இறக்கியது மாபெரும் தவறு. அவருக்குப் பதில் யூசுப் பதானையோ அல்லது யுவராஜ் சிங்கையோ இறக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு விதமாக இருந்திருக்கும்.
2. சிறப்பாக பந்து வீசி வந்த ஆர்.பி.சிங்கையும், அனுபவம் வாய்ந்த ஜாகிர்கானையும் தொடர்ந்து பந்து வீசச் செய்யாமல், இஷாந்த் சர்மாவை கூப்பிட்டது 2வது தவறு. சிங்கும், கானும் பந்து வீசியிருந்தால் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
3. முக்கியமான கட்டத்தில், கையில் ஐந்து விக்கெட்கள் இருந்த நிலையிலும் அடித்து ஆடாமல் சிங்கிள் சிங்கிள் ரன்னாக டோணி எடுத்ததை ரசிகர்கள் படு கோபத்துடன் விமர்சிக்கின்றனர்.
இதை கருத்தைத்தான் பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் கூறியுள்ளனர். டோணியின் தவறுகள்தான் ஆட்டத்தின் போக்கை குளறுபடியாக காரணம் என்கிறார்கள் அவர்கள்.
இந்த நிலையில், டோணிக்கு எதிராக ஆங்காங்கே ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவரது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ரசிகர்கள் டோணிக்கு எதிராக கோஷமிட்டு அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இதேபோல உ.பியிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
போராட்டத்தைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications