ராஞ்சி: இந்திய கேப்டன் டோணி தனது ஹம்மர் எச் 2 என்ற சொகுசு காரை பதிவு செய்ய தாமதப்படுத்தியதை அடுத்து அவருக்கு ரூ. 4 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் டோணி, ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஹம்மர் எச்2 என்ற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளனர். சுமார் ரூ. 1 கோடி மதிப்பு கொண்ட இந்த காரை சமீபத்தில் தான் டோணி வாங்கினார்.
கடந்த ஜூலை 30ம் தேதி டோணி தனது ஹம்மர் காரில் தனது நெருங்கி நண்பரும், சகவீரருமான ஆர்பி சிங்குடன் லக்னௌவில் இருந்து ராஞ்சிக்கு வந்துள்ளார்.
காரை பதிவு செய்யாமல் ஓட்டிய காரணத்துக்காக தற்போது அவருக்கு ரூ. 4 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கார் பதிவை தாமதமாக செய்த காரணத்துக்காக டோணிக்கு ரூ. 100 நேற்று அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன விதிகளின் படி கார் வாங்கிய ஒரு வாரத்துக்குள் அதை பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், டோணி காரை பதிவு செய்ய விண்ணப்பம் அளித்திருந்தார். அது முழுமையாக நிரப்பப்படாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது. அவர் கடந்த 30ம் தேதி பதிவு செய்யும் முன் கார் ஓட்டியிருப்பதால் அவருக்கு மேலும், ரூ. 4 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது என்றார்.