ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை கோட்டைவிட்ட இந்திய அணிக்கு ஐசிசி விருதுகள் ஆறுதல் அளித்துள்ளன. சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருது கேப்டன் டோணிக்கும், சிறந்த டெஸ்ட் வீரர் விருது கம்பீருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்கார் எனப்படும் ஐசிசி விருதுகள் நேற்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த கோலாகல விழாவில் வழங்கப்பட்டது.
விருத்துக்கான வீரர்கள் பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்ட் தலைமையிலான 5 பேர் குழு தேர்வு செய்தது. அதில் இந்தியாவின் அனில் கும்ளே, இங்கிலாந்தின் பாப் டெய்லர், பாகிஸ்தானின் முடாசர் நாஸர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
2008 ஆகஸ்ட் 13ம் தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி வரை நடந்த போட்டிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.
ஜான்சன் சிறந்த வீரர்...
இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனுக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த ஆண்டு 17 டெஸ்டில் 80 விக்கெட், 632 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் சூப்பர் துவக்க வீரர் கம்பீருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. 8 போட்டிகளில் 5 சதங்களுடன் 1269 ரன்கள் எடுத்ததன் காரணமாக அவருக்கு விருது அளிக்கப்பட்டது.
ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை கேப்டன் டோணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார். அவர் இந்த ஆண்டு 24 போட்டிகளில் 967 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இந்தியாவின் யுவராஜ், ஷேவாக், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த விருதை பெற்றுள்ளார்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டனாக டோணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பட்டியல்களிலும் தலா மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
டோணியுடன் டெஸ்ட் அணியில் சச்சின், கம்பீரும், ஒரு நாள் அணியில் ஷேவாக், யுவராஜூம் இடம்பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் 12வது வீரராக ஹர்பஜன் இடம்பிடித்துள்ளார்.
சிறந்த டுவென்டி-20 வீருத இலங்கையின் திலகரத்னே தில்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அம்பயராக பாகிஸ்தானின் அலீம் தார் அறிவிக்கப்பட்டார். சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் கிளைர் டெய்லர் பெற்று கொண்டார்.