
இதுகுறித்து கிரிக்நெக்ஸ்ட் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வீரர் இந்தத் தகவலைக் கூறியதாக அந்த இணையதளம் செய்தியில் சொல்லியுள்ளது.
இதுகுறித்து அந்த வீரர் கூறுகையில், கம்பீர் சுயநலமாக செயல்படுகிறார். இது டோணியை அப்செட்டாக்கியுள்ளது. அணியில் தனது இடம் பறி போய் விடக் கூடாது என்ற கவலை மட்டுமே அவருக்கு உள்ளது. மேலும் தனது தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி மட்டுமே அவர் கவலைப்படுகிறார். இதனால்தான் கம்பீர் குறித்து கேப்டன் டோணி புகார் கொடுக்க முடிவு செய்தார் என்றார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் கம்பீரின் ஆட்டமும் கேள்விக்குறியதாகவே இருந்தது. இரண்டு ரன் அவுட்களுக்கு அவர் காரணமாக இருந்தார். அதாவது அவர் ரன் எடுப்பதற்காக மற்றவர்களைக் காவு கொடுக்கத் தயாராக இருந்தார்.
அதேபோல மும்பையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது 2வது இன்னிங்ஸில் ஒட்டுமொத்த அணியும் சரிந்து போய்க் கொண்டிருந்தபோது ஆமையை விட மகா மெதுவாக இவர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தார். 142 பந்துகளைச் சந்தித்து வெறும் 65 ரன்களை மட்டுமே தேற்றியிருந்தார். அதாவது அரை சதம் எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் அவர் ஆடியது அப்பட்டமாகவே தெரிந்தது.
அதேபோல 3வது டெஸ்ட் போட்டியிலும் தனது ரன்கள் பற்றி மட்டுமே அவர் கவலைப்பட்டது போல தெரிந்தது. இந்தப் போட்டியில் ஷேவாக், புஜாரா ஆகிய இருவரும் ரன் அவுட் ஆக கம்பீர்தான் காரணம்.
இதனால்தான் கடுப்பாகிப் போன டோணி, கம்பீர் தனக்காக ஆடுகிறார். அணியைப் பற்றி அவர் கவலைபப்டுவதாக இல்லை. அணியின் நலன் குறித்து அவருக்கு அக்கறையும் இல்லை, சுயநலத்துடன் ஆடுகிறார் என்று புகார் கொடுத்துள்ளாராம்.