மும்பை: கேப்டன் டோணிக்கு தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அவர் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் முத்தரப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் அவருக்கு பேட்டிங்கின்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கீப்பிங் செய்யவில்லை.

தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இதுகுறித்து வாரிய செய்திக்குறிப்பில், டோணிக்கு உடல் நிலை சரியில்லை. காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் பரிசீலனைக்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முத்தரப்பு ஒரு நாள் தொடரிலிருந்து டோணி விலகியுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள ஹேம்ஸ்டிரிங் பிரச்சினை பெரிதாகியிருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து அவருக்குப் பதில் அம்பட்டி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டனாக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார்.