
எஸ்ஸக்ஸ் கவுண்டி அணியில் சமீபத்தில் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் இந்த வாய்ப்பு முதலில் ஷேவாக்கிடம்தான் வந்ததாம். ஆனால் அவர்தான் கம்பீர் பெயரைப் பரிந்துரைத்து அவருக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தந்தாராம்.
கம்பீரும், ஷேவாக்கும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வீரர்கள் ஆவர். இருவருக்கும் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில் தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை சக டெல்லி வீரரான கம்பீருக்கு ஷேவாக் பெற்றுக் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களான ஜாகிர்கானும், யுவராஜ் சிங்கும் மீண்டும் அணியில் இடம் பிடிப்பதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இருவரும் பிரான்ஸில் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஷேவாக் தனக்குக் கிடைத்த வாய்ப்பை விட்டிருப்பது கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக டெக்கான் குரானிக்கிள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் எஸ்ஸக்ஸ் அணிக்கு விளையாட கிடைத்த வாய்ப்பை ஷேவாக், கம்பீருக்கு திருப்பி விட்டுள்ளார். ஷேவாக் கிடைக்காததால்தான் கம்பீரை நாடியதாக எஸ்ஸக்ஸ் பயிற்சியாளர் பால் கிரேசன் கூறியிருப்பது கவனத்துக்குறியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேவாக் ஏன் மறுத்தார் என்பதற்கான காரணத்தை தன்னால் கூற முடியாது என்றும் கிரேசன் தெரிவித்துள்ளார்.
விரக்தியின் விளிம்புக்குப் போய் விட்டாரோ ஷேவாக்...?