டிராவிட் போட்டி அபார இரட்டை சதம்
மும்பை: ஒரு நாள் போட்டிக்கான அணியிலிருந்து தன்னை நீக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களுக்கு நச்சென்று பதிலளிக்கும் வகையில் மும்பையில் நடந்த ரஞ்சி கோப்பைப் போட்டியில் ராகுல் டிராவிட் அதிரடியாக ஆடி இரட்டை சதம் போட்டார்.இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு விசேஷம் தவறாமல் தொடர்ந்து பல காலமாகவே நடந்து வருகிறது. அதாவது, நன்றாக விளையாடும் வீரர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அவர்கள் காட்டில் பரிசு மழையும், பாராட்டு மழையும் அடை மழையாக பெய்யும்.
ஆனால் அவர்கள் ஒரு போட்டியில் சொதப்பி விட்டாலும் போதும், அவ்வளவுதான் அப்படியே கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள். இதில் கேப்டன்கள்தான் படாதபாடு படுவாகள்.
கங்குலிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த மவுசு என்ன, கிரிக்கெட் வாரியத்தின் செல்லப் பிள்ளையாகவே அவர் வலம் வந்தார். அவர் சொன்னதுதான் சட்டம், அவர் சொல்படிதான் அனைத்துமே நடந்தது என்று கூறும் அளவுக்கு படு பயங்கர செல்வாக்கோடு இருந்தவர் கங்குலி.
இவர் கேப்டனாக இருந்தபோதுதான் பல இளம் வீரரர்கள் அணிக்குள் வர முடிந்தது. இளைய ரத்தத்தைத்ப் பாய்ச்சியவர் கங்குலி என்றால் அது தவறில்லை. ஆனால் இன்று இருக்கும் இடமே தெரியாமல் சாதுவாக மாறிப் போய் விட்டார் கங்குலி.
அதேபோல இந்திய அணியின் கேப்டனாக இருந்த டிராவிடும் தனது திறமையான கேப்டன்ஷிப்பால் பல வெற்றிகளைப் பெற்றார். ஆனால் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கேவலமாக தோற்றதால் டிராவிட் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்காரும் டிராவிடை கடுமையாக விமர்சித்தார். இதனால் அதிருப்தியில் இருந்து வந்த டிராவிட் 20-20 ஒருநாள் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. மேலும் கேப்டன் பதவியிலிருந்தும் விலகினார்.
இந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் டிராவிடை சேர்க்கவில்லை. இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக சப்பைக் கட்டு கட்டினார்.
ஆனால் டிராவிட் நீக்கப்பட்டதாகவே பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்தனர். மேலும் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற மூத்த வீரர்களும் கூட டிராவிட் நீக்கத்தால் அப்செட் ஆகியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியத் தேர்வுக் குழுவினருக்கு நச்சென்று பதிலளிக்கும் வகையில் டிராவிட் பேட்டிங்கில் ஒரு கலக்கு கலக்கியுள்ளார் - அதுவும் மும்பையில் வைத்து.
மும்பையில் நடந்த கர்நாடகா, மகாராஷ்டிரா இடையிலான ரஞ்சி போட்டியில், டிராவிட் படு ஆவேசமாக ஆடி இரட்டை சதம் அடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 40 ரன்களை எடுத்த டிராவிட், 2வது இன்னிங்ஸில் ரன்னாட்டம் ஆடி விட்டார்.
இவரது அபார ஆட்டத்தால், கர்நாடக அணி தோல்வியின் விளம்பிலிருந்து மீண்டு டிரா செய்து தப்பியுள்ளது. நடுக்கள வீரராக தனது மதிப்பு என்ன என்பதை டிராவிட் நேற்று உணர்த்தி விட்டார். படு பிரமாதமாக அவர் ஆடிய விதம், நடுக்கள வீரர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பாடம் நடத்துது போல இருந்தது.
டிராவிடுக்கு இது 50வது முதல் தர இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவிட் ஆடிய ஆட்டம், நான் இன்னும் அதே டிராவிட்தான் என்று சொல்வது போல இருந்தது. இதைக் கருத்தில் கொண்டாவது, மீதமுள்ள 3 ஒரு நாள் போட்டிகளுக்கும் டிராவிட் சேர்க்கப்பட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications