ஹாமில்டன்: கம்பீர், டிராவிட், சச்சின் வரிசையாக அரைசதம் கடக்க நியூசிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் டெஸ்டில் இந்திய அணி சரியான பதிலடி கொடுத்தது. இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்திருந்தது. ஷேவாக் 22, கம்பீர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஷேவாக் காலையில் கூடுதலாக 2 ரன்கள் மட்டுமே சேர்த்தநிலையில் ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த டிராவிட், கம்பீருடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இவர்கள் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் 105 ரன்கள் சேர்த்தநிலையில் கம்பீர் 72 ரன்களுக்கு மார்டின் பந்தில் அவுட்டானார். 12 பவுண்டரிகள் உதவியுடன் 66 ரன்கள் எடுத்த டிராவிட், ஓ பிரையன் பந்தில் போல்டு ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய லட்சுமண், சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். லட்சுமண் 30 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சச்சின் அரைசதம் கடந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து, 1 ரன் பின்தங்கியுள்ளது.
சச்சின் 70 (11 பவுண்டரி), யுவராஜ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். கைவசம் 6 விக்கெட் இருக்கும் நிலையில் நாளை மேலும் அதிக ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்றால், இந்திய அணி போட்டியை வெல்லும் வாய்ப்பை அதிகரித்து கொள்ளலாம்.