டெல்லி: வீரேந்திர ஷேவாக் காயமடைந்திருந்ததால்தான் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டார். இப்போது ஷேவாக் குணமடைந்து அணிக்குத் திரும்பி விட்டதால் டிராவிட் நீக்கப்பட்டுள்ளார். இதில் வியப்பேதும் இல்லை என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
வீரேந்திர ஷேவாக் காயமடைந்திருந்த காரணத்தால், இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையி்ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் டிராவிட் நீக்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து கவாஸ்கரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கவாஸ்கர் கூறுகையில், ஷேவாக் விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும். ஷேவாக் காயமடைந்திருந்தார். இதனால் இலங்கை சுற்றுப்பயணம் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இதுபோன்ற சமயங்களில் யாராவது ஒருவர் ரீப்ளேஸ் செய்வார். அப்படித்தான் டிராவிட் அணிக்கு வந்தார். ஷேவாக் காயமடைந்திருந்ததாலும், மற்ற வீரர்களைக் கொண்டு ஷேவாக் இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாததாலும் டிராவிட் கொண்டு வரப்பட்டார்.
தற்போது ஷேவாக் குணமடைந்து விட்டார். அணிக்குத் திரும்பியுள்ளார். டிராவிட் இடத்தை இழந்துள்ளார். அவ்வளவுதான் என்றார் கவாஸ்கர்.
அதேசமயம், யூசுப் பதான் நீக்கம் குறித்து கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், யூசுப் பதான் கடைசி 5 முதல் 10 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறமை படைத்தவர். அப்படிப்பட்ட பேட்ஸ்மேன் அவர். மேலும் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். ஐந்தாவது பவுலரின் தேவையை இவர் பூர்த்தி செய்வார்.
அவர் நிறைய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் நீக்கினோம் என்று கூற முடியாது. காரணம், அவர் 6வது வீரராக களம் இறங்குகிறார். அந்த நேரத்தில் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாது.
6 அல்லது 7வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவர் தனது இஷ்டத்திற்கு விளையாட முடியாது. அணிக்கு என்ன ஸ்கோர் தேவையோ அதற்கேற்பதான் ஆட முடியும். மிகவும் நெருக்கடியான நிலையாக இருக்கும் அந்த சமயத்தில் யாருமே பெரிய ஸ்கோரை எப்போதுமே எடுத்துக் கொண்டிருக்க முடியாது.
எனவே, பதான் எவ்வளவு ரன் அடித்தார் என்பது முக்கியமில்லை. எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் முக்கியம்.
இதை கேப்டன் அல்லது பயிற்சியாளர் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினரும் யோசித்து இருக்க வேண்டும். அவர் தேர்வு பெற்று இருந்தால் அணி சமபலமாக இருக்கும். அவரை நீக்கி இருப்பது அணிக்கு நல்லதல்ல என்றார் கவாஸ்கர்.