டெல்லி: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறார் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு 30 பேர் கொண்ட உத்தேச அணியில் ராகுல் டிராவிட் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
மினி உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2008ல் பாகிஸ்தானில் நடக்கிவிருந்த இந்த தொடர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 24ம் தேதி துவங்கும் இத்தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுடன் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையி்ல் இத்தொடருக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த 'இந்திய சுவர்' ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அவர் கடந்த 2007 அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தார்.
சமீபத்தில் நடந்த டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் சூப்பர்-8 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் பவுன்சர்களை சமாளிக்க மிகவும் திணறினர். இதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.
மேலும், அடுத்து சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் தென் ஆப்ரிக்காவில் பந்துகள் எகிறும் என்பதால் டிராவிட்டின் சேவை அவசியம் தேவை என தேர்வு குழுவினர் கருதுகின்றனர்.
அதேநேரத்தில் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், ஸ்ரீசாந்த் ஆகியோர் 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம்பெறவில்லை.
30 பேர் கொண்ட உத்தேச அணி:
டோணி, சச்சின், டிராவிட், ஷேவாக், கம்பீர், யுவராஜ், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், அபிஷேக் நாயர், இஷாந்த் சர்மா, ஜாகிர் கான், ஆர்பி சிங், பிரவீண் குமார், ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், முனாப், அஸ்வின், விஜய், அமித் மிஸ்ரா, அஜின்கியா ரஹானே, தவால் குல்கர்னி, பத்ரிநாத், ஆசிஷ் நெஹ்ரா, விராத் கோஹ்லி, பிகே சிங், விர்த்திமான் சாகா, பங்கஜ் சிங்