பெங்களூர்: நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் வீரர்களின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக ராகுல் டிராவிட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கரும் இடம்பெற்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐ.பி.எல். சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3-வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
அக்டோபர் 4-ம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது. 5-ம் தேதி 2-வது அரையிறுதிப் போட்டியும், அக்டோபர் 6-ம் தேதி இறுதிப்போட்டியும் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த அணிகளில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பு வகிப்பார். ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ராகுல் டிராவிட் கேப்டனாக இருப்பார்.