
கிரிக்கெட் வீரராக சச்சினைப் பார்த்தவர்களை விட சச்சினுக்காக கிரிக்கெட் பார்த்தவர்களே நமது நாட்டில்அதிகம். ஒருகாலத்தில் இப்படிப்பட்ட ஹீரோ ஒர்ஷிப்பை ஏகபோகமாக வைத்திருந்தவர் கபில்தேவ். அவருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோவாக, ஏன் கடவுளாகவே மாறிப் போனவர் சச்சின் மட்டுமே.
கிரிக்கெட் என்றால் சச்சின் மட்டுமே என்பதை கொள்கையாகவை வைத்திருப்பவர்கள் இந்திய ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு சச்சின் இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் ஆட மாட்டார் என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி ஒரு அதிர்ச்சியில்தான் ரசிகர்கள் இப்போது மூழ்கிப் போயுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு தலைமுறையைத் தாண்டி விட்டது சச்சினின் கிரிக்கெட் பயணம். எனவே பெரும்பாலான ரசிகர்கள் பிறந்தது முதலே சச்சினை மட்டுமே பார்த்து வளர்ந்தவர்களாக உள்ளனர். இதனால்தான் அவர்கள் அனைவரும் உடைந்து போயுள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில், ஏன் பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் கிரிக்கெட் வெறி அதிகமாக காணப்பட சச்சின் தான் காரணம். கையில் குச்சியையும், ஒரு பேட்டையும் வைத்துக் கொண்டு தெருக்கள் தோறும், ஊர்கள் தோறும், இளைஞர்கள் விளையாடுவதற்கு சச்சினின் தாக்கம்தான் காரணம். அதை யாருமே மறுக்க முடியாது. காரணம் அதுதான் உண்மையும் கூட.
இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு சச்சின் இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் ஆட மாட்டார் என்பது பெரும் வருத்தமாக உள்ளது. சச்சினும், கங்குலியும் சேர்ந்து ரன் மழை பொழிந்த காட்சிகளையும், சச்சின் அடுத்தடுத்து சாதனைகளை அடுக்கிக் கொண்ட போனதையும், சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணி பவுலர்களை நையைப்புடைத்ததையும் ரசிகர்கள் மறக்கவே முடியாது. இதனால்தான் அவர்களுக்கு சச்சினின் ஓய்வு பெரும் சோகத்தைக் கொடுத்துள்ளது.
தேஜ்வீர் சிங் என்ற தீவிர சச்சின் ரசிகர் கூறுகையில், டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. ஆனால் டிசம்பர் 23ம் தேதி பெரும் குண்டைத்தூக்கிப் போட்டு விட்டார் சச்சின். இனிமேல் நான் ஒரு நாள் போட்டிகளையே பார்க்க மாட்டேன் என்றார் கண்களில் நீர் ததும்ப.
ரமணா என்பவர் கூறுகையில், கிரிக்கெட்டின் கடவுளே ஓய்வு பெற்று விட்டார். இனிமேல் ஒரு நாள் போட்டிகளை யார் காப்பாற்றுவது...எனக்கு சச்சின் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது. நானும் இனிமேல் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்க மாட்டேன் என்று கருதுகிறேன். என்னை 23 வருடமாக கிரிக்கெட் பார்க்க வைத்ததற்கு சச்சினுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார் ரமணா.
பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இப்படித்தான் உள்ளது.